Sunday, June 20, 2021

கீதை காட்டும் பாதை –

 

கீதை காட்டும் பாதை – 

இந்தக் கீதோபதேசம் எல்லோருக்கும் எளிதில் படிக்கவோ, கேட்கவோ கிடைத்து விடுவதில்லை. பகவத் கீதை வேண்டிய அளவு கடைகளிலும், நூலகங்களிலும், இணையத்திலும் கொட்டிக் கிடந்தாலும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்க்கே அதைப் படிக்கும் ஆர்வம் வரும். ஆரம்பித்தவர்கள் எல்லாருக்கும் படித்து முடிக்கும் வரை அதே ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. புண்ணியம் செய்தவர்க்கே அதைப் படித்து முடிக்க முடியும். படித்து முடிப்பவர்களிலும்  சிறிதேனும் அதைப் பின்பற்ற முடிவதோ ஆயிரத்தில் ஒருவராலேயே முடியும். அதுவும் முந்தைய பிறவிகளில் ஆன்மிக முயற்சிகள் தொடர்ந்து எடுத்தவருக்கே சாத்தியப்படும்.


இப்படிப்பட்ட கீதையைச் சொல்லவும் கேட்கவும் கூட அருகதை வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுவதாவது:


இந்த உண்மையை தவமில்லாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க வேண்டுமென்ற ஆசையில்லாதவனுக்கும் எப்போதும் சொல்லாதே. என்னை வெறுப்பவனுக்கும் சொல்லாதே!


எவனொருவன் இந்தப் பரமரகசியத்தை என்னுடைய பக்தர்களுக்கு உபதேசிப்பானோ, அவன் என்னிடம் அதிகமாக பக்தி செலுத்தி என்னையே அடைவான். சந்தேகமில்லை.


அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்யக் கூடியவன் மனிதர்களில் வேறு யாருமில்லை. அப்படியே பூமியில் அவனைக் காட்டிலும் எனக்கு மிகப் பிரியமானவன் வேறொருவன் இருக்கப் போவதில்லை.


நம் இருவருக்குமிடையே நடந்த இந்த தர்மமான உரையாடலை எவனொருவன் படிப்பானோ அவன் ஞானவேள்வியினால் என்னை ஆராதித்தான் என்றே நான் நினைப்பேன்.


சிரத்தையுடன், பொறாமையின்றி இதை எந்த மனிதன் கேட்கிறானோ அவனும் சகல பாவங்களும் நீங்கப் பெற்று புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். ”


இந்த வார்த்தைகளுக்கு அதிக விளக்கம் தேவையில்லை.  நம்பிக்கையோ, தகுதியோ, பக்தியோ இல்லாதவர்களுக்கு பகவத்கீதையை உபதேசிப்பதில் அர்த்தமில்லை. புரியாத விஷயங்களை, புரிந்து கொள்ளச் சக்தியற்றவனுக்குச் சொல்வதில் ஒரு பலனுமில்லை.


கீதையைத் தகுதியுள்ள நான்கு பேருக்கு எடுத்துச் சொல்பவன் இறைவனுக்குப் பிரியமானவனாகிறான். படிப்பவன் ஆராதிப்பவனாகிறான். கேட்பவன் புண்ணியம் செய்தவனாகிறான்.


முடிவில் பகவான் கேட்கிறார்:

பார்த்தா! நீ மனத்தை ஒருமுகப்படுத்தி நான் உபதேசித்ததைக் கேட்டாயா? உன்னுடைய அஞ்ஞான மயக்கம் நீங்கியதா?

                                                       

அர்ஜுனன் சொல்கிறான்:

அச்சுதா! உன் அருளால் மோகம் அழிந்தது; நினைவு வந்தது; சந்தேகங்கள் நீங்கின; நிலைபெற்றேன்; நீ சொன்னபடியே செய்கின்றேன்.


அதன் பின்

சஞ்சயன் சொல்கின்றான். “இவ்வாறு வாசுதேவனுக்கும், மகாத்மாவான அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அற்புதமான, மயிர்க்கூச்செறிய வைக்கிற உரையாடலை நான் கேட்டேன்”


வியாச பகவானுடைய அருளால் இரகசியங்களுக்குள் உத்தம இரகசியமான இந்த யோகத்தை யோகஸ்வரனான கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். இந்த அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


அரசனே அந்த ஹரியினுடைய மிக்க அற்புதமான ரூபத்தை நினைத்து நினைத்து எனக்கு அதிகமான ஆச்சரியம் தோன்றுகிறது. மறுபடியும் மறுபடியும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


யோகேஸ்வரனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, காண்டீபத்தைத் தாங்கிய பார்த்தன் எங்கிருக்கிறானோ, அந்த இடத்தில் லக்‌ஷ்மியும், வெற்றியும், நீதியும் நிலைத்திருக்கும் என்பது என் முடிவு.


இந்த உன்னதமான கீதோபதேசத்தை திவ்ய திருஷ்டியால் பார்க்கவும், கேட்கவும் முடிந்த சஞ்சயனின் மனநிலையை நம்மால் உணரமுடிகிறது. அவனைப் போல் மீண்டும் மீண்டும் நினைத்தும், படித்தும் மகிழ்ச்சியடைய எத்தனையோ ஞானப் பொக்கிஷம் இந்தக் கீதையில் புதைந்து கிடக்கின்றது.



’தர்மக்‌ஷேத்ரே” என்று ஆரம்பிக்கும் பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிவடைகிறது. மம என்றால் ‘எனது’ என்று அர்த்தம். முதலும் முடிவுமான வார்த்தைகள் ”தர்மம்” மற்றும் “என்னுடைய” என்பன. அதாவது என்னுடைய தர்மம் என்பதை விளக்கும் நூலாக பகவத் கீதை இருப்பதை சூட்சுமமாக இது குறிப்பதாகவே அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல நமது தர்மத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் உணர்த்தும் நூலாக பகவத்கீதை இருக்கிறது என்பது உண்மையே.   



ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீதை புதுப்புது ஆழங்களை உணர்த்திய வண்ணம் இருப்பதை அடியேன் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நமது ஞானமும், பக்குவமும், விரிவடைய விரிவடைய பகவத் கீதை புதுப்புது அர்த்தங்களுடன் மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதனால் இது ஒரு முறை படித்து விட்டு மூடிவைத்து விடக்கூடிய நூல் அல்ல.


சந்தேகமும், குழப்பமும், துக்கமும் நிரம்பியிருந்த அர்ஜுனன் இந்த பகவத்கீதையைக் கேட்டு முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும் பெற்றான். அதே போல வாழ்க்கையில் எந்த நேரத்தில் குழப்பமும், சந்தேகமும், துக்கமும் நம்மை ஆட்கொண்டாலும் தெளிவுக்கும், நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் நாம் ஒவ்வொரு முறையும் இந்தப் பகவத் கீதையை நாடுவோமாக! அந்த நேரங்களில் முழு கீதையையும் மறுபடி நாம் படிக்க வேண்டுமென்பதில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக் கொண்டு ஏதோ ஒருசில பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம் அப்போதைய நிலைமைக்கான உபதேசம் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும் என்பதையும், இறைவனால் வழிநடத்தப்படுவோம் என்பதையும் நான் என்  சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

Sunday, June 13, 2021

வீரபத்திரர்

 வீரபத்திரர்_யார்?


தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம். 


ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு:- 


தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை. 


அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது. 


அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும். 


வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது. 


பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான். 


30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர். 


விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள். 


அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள். 


தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார். 


அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார். 


தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நிந்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன. 


தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார். 


அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர். 


தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது. 


அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை.


வீரபத்திரரை வழிபட்டால் விவேகம், வீரம் வெற்றிகள் தேடி_வரும்.